வெளிநாட்டில் மருத்துவம் படித்து தமிழ்நாட்டில் பயிற்சி மருத்துவராக பணியாற்ற கட்டணம் குறைந்துள்ளது ...சுகாதாரத்துறை அமைச்சர்

சென்னை: ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவம் பயின்று கொண்டு வருகின்றனர். வெளிநாடுகளில் மருத்துவ படிப்பு முடித்தவர்கள் இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற Foreign Medical Graduate Examination’ தேர்வு கட்டாயம் எழுத வேண்டும்.

அதன் பின் இந்தியாவில் ஓராண்டு காலம் பயிற்சி மருத்துவராக பணிபுரிய வேண்டும். அதற்கு பின்னரேதான் மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவை பெற்று மருத்துவராக பணியாற்ற முடியும். இந்த நிலையில் தமிழகம் உட்பட நாடு முழுவதும் மருத்துவ பயிற்சி மேற்கொள்ள வாய்ப்பில்லாமல் ஏராளமான மருத்துவ மாணவர்கள் காத்திருக்கின்றனர்.


இதற்கு காரணம் மருத்துவப் பயிற்சி மேற்கொள்வதற்கான இடங்களின் எண்ணிக்கை 10 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக குறைக்கப்பட்டதே ஆகும். மேலும் இந்த பயிற்சி மருத்துவர் இடங்களை அதிகரிக்க மாணவர்களில் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு கொண்டு வருகிறது.

மேலும் வெளிநாட்டில் மருத்துவ படிப்பை முடித்தவர்கள் தமிழ்நாட்டில் மருத்துவராக பணியாற்ற எம்.ஜி.ஆர் மருத்துவ கல்லூரிக்கு ரூ.3.2 லட்சம் கட்ட வேண்டியிருந்தது. இதில் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ரூ.2 லட்சம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். மாணவர்களின் கோரிக்கையை அடுத்து தமிழக அரசின் நடவடிக்கை காரணமாக கட்டணம் ரூ.30,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.