தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடுமாம்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 10, 11-ம் தேதிகளில் ஒருசில இடங்களிலும், வருகிற 12-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 13 முதல் 15-ம் தேதி வரை ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

இதனை அடுத்து வருகிற 10-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருச்சி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது

அதை தொடர்ந்து வருகிற 11-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்களில் திருப்பத்தூர், வேலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.