டெல்லியில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் குஜராத், மராட்டியம், அசாம், டெல்லி போன்ற மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. தற்போது கேரளாவில் கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அங்குள்ள பல மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது டெல்லி மற்றும் மராட்டியம் பல்வேறு பகுதிகளிலும் மழைக்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த ஒரு வாரமாக தலைநகர் டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் நிலவும் மோசமான வானிலை காரணமாக டெல்லியில் வசிக்கும் மக்களுக்கு பெய்த மழையால் சிறிது நிவாரணம் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், மராட்டியத்தில் நாளை மீண்டும் தென் மேற்கு பருவமழைக்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவை பொறுத்தவரை, இமாச்சல பிரதேசத்திற்கும் அரியானா மற்றும் பஞ்சாப்பிற்கும் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அசாம், பீஹார் கனமழை காரணமாக அங்குள்ள லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து வருகின்றனர்.