உணவு கொள்முதலில் முறைகேடு குறித்து பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

உணவு கொள்முதல் செய்வதில் முறைகேடு... தமிழகத்தில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் கரோனா நோயாளிகளுக்கு உணவு கொள்முதல் செய்வதில் நடைபெறும் முறைகேடு குறித்து விசாரிக்கக்கோரிய மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த எம்.லியோனல் அந்தோணி ராஜ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கும், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் அரசு செலவில் உணவு வழங்கப்படுகிறது. இதற்காக அரசு பல கோடி ரூபாய் செலவிடுகிறது. ஆனால் அதிகாரிகள் உணவகங்களை நேரில் அணுகி குறைந்த விலைக்கு தரம் குறைந்த உணவு வாங்கி வழங்குகின்றனர்.

கொரோனா நோயாளிகள், மருத்துவர்களுக்கு உணவு கொள்முதல் செய்வதில் பெரியளவில் முறைகேடு நடைபெறுகிறது.
எனவே கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவ. 6-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.