ஹாங்காங் ஜனநாயக ஆதரவு பத்திரிக்கை உரிமையாளர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை

சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டம் கடந்த ஜூன் மாதம் முதல் ஹாங்காங்கில் அமலுக்கு அமலுக்குவந்ததில் இருந்தே ஜனநாயகத்திற்கு ஆதரவான அரசியல் கட்சியினர் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், பல்வேறு சமூக ஆர்வலர்களும், சுதந்திரத்திற்கான ஆதரவாளர்களும் சீன அரசால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஹாங்காங் மக்களின் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஹாங்காங்கின் அரசியல் உள்விவகாரங்களிலும் சீனா நேரடியாக தலையிட்டு வருகிறது.

இந்நிலையில், ஹாங்காங்கின் மிகப்பெரிய பத்திரிக்கை நிறுவனமாக செயல்பட்டுவரும் நாளிதழ் ஆப்பிள் டெய்லி நாளிதழ். ஹாங்காங் ஜனநாயத்திற்கு ஆதரவாக செயல்பட்டுவரும் இந்த பத்திரிக்கையின் உரிமையாளர் ஜிம்மி லேய். 73 வயதான ஜிம்மி லேய் தனது நாளிதழ் மூலம் ஜனநாயக ஆதரவு கருத்துக்களை தெரிவித்து வந்தார். ஆப்பிள் டெய்லி பத்திரிக்கையை நடத்து நெக்ஸ்ட் டிஜிட்டல் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் சீன ஆதரவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது சோதனையில், ஆப்பிள் டெய்லி பத்திரிக்கை அலுவலக இடத்தை ஒப்பந்தத்தை மீறி பயன்படுத்தியதாக ஜிம்மி லேய் மற்றும் அவரது 2 ஊழியர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டு 3 பேரும் ஹாங்காங் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஆப்பிள் டெய்லி பத்திரிக்கை உரிமையாளர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் ஹாங்காங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஜிம்மி லேய் ஹாங்காங் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. விசாரணையின் போது ஜிம்மி லேய்க்கு ஜாமீன் வழங்க ஹாங்காங் அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஹாங்காங் அரசின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் ஜிம்மி லேய்-க்கு ஜாமீன் வழங்கியது.

அதன் படி ஜாமீன் பெறும் ஜிம்மி லேய் அபராதத்தொகையாக 1.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பணத்தை அபராத தொகையாக செலுத்த வேண்டும். ஜாமீன் மூலம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர் ஜிம்மி லேய் தனது வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டபோதும் ஜிம்மி லேய் வீட்டுச்சிறையில் வைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், அவர் வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.