மண்டபத்திற்கு நான் கேரண்டி... உறுதி கொடுத்தார் எடப்பாடியார்

சென்னை: பதற்றத்தில் திருமண மண்டப உரிமையாளர்... அதிமுகவில் எழுந்துள்ள சலசலப்பால் அக்கட்சியின் பொதுக்குழுவுக்கு திருமண மண்டபம் கொடுத்த உரிமையாளர் தரப்பு இப்போது பதற்றம் ஆகியுள்ளதாம்.

அசாதாரண சூழலில் பொதுக்குழு நடைபெறவுள்ளதால் அங்கு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு அதனால் மண்டபத்தின் உடைமைகள் ஏதும் சேதம் ஆகிவிடுமோ என்ற கவலை தான் அந்த பதற்றத்துக்கு காரணமாம். இதனிடையே அந்த கவலையே உங்களுக்கு வேண்டாம் நாங்கள் பொறுப்பு என்ற உறுதியை எடப்பாடி பழனிசாமி டீம் கொடுத்திருக்கிறதாம்.

சென்னை வானகரத்தில் உள்ல ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் தான் அதிமுகவின் ஒவ்வொரு பொதுக்குழுவும் நடைபெறுவது வழக்கம். தனக்கு செண்டிமெண்டாக மிகவும் பிடித்த இடம் என்பதால் ஸ்ரீவாரு பேலஸ் திருமண மண்டபத்தில் வைத்தே கட்சிப் பொதுக்குழுவை நடத்தி வந்தார் ஜெயலலிதா. அவரது மறைவுக்கு பிறகு அந்த மண்டபத்தில் வைத்து தான் சசிகலாவும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இப்போதே அதே மண்டபத்தில் வைத்து தான் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட உள்ளார். ஆனால் இந்தப் பொதுக்குழு அசாதாரண சூழலில் நடைபெறவுள்ளதால், கலாட்டாகளும், கலகங்களும் கழகத்தில் அரங்கேறலாம் என அஞ்சப்படுகிறதாம்.. ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும், சசிகலா, டிடிவி தினகரன் ஆதரவாளர்களும் அந்தப் பொதுக்குழுவுக்கு குடைச்சல் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில் திருமண மண்டபத்திற்கு இதன் மூலம் சேதம் ஏதும் ஏற்பட்டு விடுமோ என அதன் நிர்வாகத் தரப்பில் அஞ்சப்படுகிறது. இதன் காரணமாகத் தான் பொதுக்குழுவுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு இபிஎஸ் தரப்பில் டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பொதுக்குழுவால் மண்டபத்துக்கு எந்த சேதமும் ஏற்படாது என்றும் அதற்கு நாங்கள் பொறுப்பு எனவும் எடப்பாடி பழனிசாமி டீம் மண்டப நிர்வாகத்திற்கு உறுதி கொடுத்துள்ளதாம்.