காதலுக்காக விளைவுகளை நான் எதிர்கொள்வேன் - நடிகை ரியா சக்கரவர்த்தி

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியது, பண மோசடியில் ஈடுபட்டதாக அவரின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக போதைப்பொருள் கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

இந்த வழக்கில் ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்கள் குறித்து ஆய்வு செய்தபோது, அவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் ரியா மீது போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ரியாவின் சகோதரர் ஷோயிக், மற்றும் சுஷாந்த் சிங் வீட்டில் ஹவுஸ்கீப்பிங் மேனேஜராக பணியாற்றிய சாமுவேல் மிராண்டா ஆகியோர் கைது செய்யப்பட்டு என்சிபி காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கொண்ட குழு மற்றும் போலீசார் இன்று ரியாவின் வீட்டுக்குச் சென்று, விசாரணைக்கு இன்று ஆஜராகும்படி சம்மன் அளித்துவிட்டு திரும்பினர். அதன்பின், ரியா தனது வழக்கறிஞருடன் விசாரணைக்கு ஆஜராவதற்காக புறப்பட்டுச் சென்றார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒருவரை நேசிப்பது குற்றம் அல்ல. காதலுக்காக விளைவுகளை நான் எதிர்கொள்வேன். நிரபராதி என்பதால் நான் முன் ஜாமீனுக்காக நீதிமன்றத்தை அணுகவில்லை என்று தெரிவித்துள்ளார்.

என்சிபி அலுவலகத்தில் விசாரணை நடைபெறுகிறது. விசாரணையின்போது, அதிகாரிகளின் கேள்விகளுக்கு ரியா திருப்திகரமான பதில்களை வழங்க முடியாவிட்டால், அவர் கைது செய்யப்படலாம். ரியாவிடம் நடத்தப்படும் விசாரணை மற்றும் அவரது வாக்குமூலம் முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படலாம். இந்நிலையில் இந்த வழக்கில் ரியா கைதாவதற்கு தயாராக இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.