ராகுலும், பிரியங்கா காந்தியும் இதை செய்தால் நான் அரசியலை விட்டு விலக தயார் - கஜேந்திர சிங் செகாவத்

மத்திய அரசு இயற்றியுள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு கடந்த மாதம் 27-ந் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தபின், அவை சட்டமாக மாறின.

இந்த வேளாண் சட்டங்களுக்கு, காங்கிரஸ், தி.மு.க., இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதேரா ஆகியோர் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர்கள் மீது மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத் கடுமையான தாக்குதலைத் தொடுத்து உள்ளார். மேலும் நாட்டில் விவசாயிகளை 'தவறாக வழிநடத்தியதாக' குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு ஆடு மற்றும் செம்மறி ஆடுகளை வேறுபடுத்திப் பார்க்க முடியாது. அந்த சகோதர-சகோதரிக்கு விவசாய நிலங்களில் உள்ள செடிகளின் இலைகள் மூலம் அந்த பயிரை அடையாளம் காண முடிந்தால் நான் அரசியலை விட்டு விலகத்தயார் என்று தெரிவித்தார்