மிகவும் மோசமான ஜனாதிபதி வேட்பாளர் என்றால் அது ஜோ பைடன் மட்டும்தான் - ஜனாதிபதி டிரம்ப்

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி, டிரம்ப் 2-வது முறையாக போட்டியிட அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் களம் இறக்கப்பட்டுள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ள ஜனாதிபதி டிரம்ப், தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் நேற்று பென்சில்வேனியா மாகாணத்தில் ஜனாதிபதி டிரம்ப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது நடந்த பிரசாரா பேரணியில் டிரம்ப் கலந்து கொண்டார். அப்போது பேசிய அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனை கடுமையாக விமர்சனம் செய்தார்.

அதிபர் டிரம்ப் பேசுகையில், அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிகவும் மோசமான ஜனாதிபதி வேட்பாளர் என்றால் அது ஜோ பைடன் மட்டும்தான். அவர் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டது நம்பமுடியாதது; அருவருப்பானது மற்றும் அவமானகரமானது. தேர்தலில் அவர் வென்றால் நாட்டை அவர் வழி நடத்த மாட்டார். தீவிர இடதுசாரிகள் தான் நாட்டை இயக்கும் என்று கூறினார்.

மேலும் அவர், ஜோ பைடன் வெற்றி பெற்றால் அது சீனாவின் வெற்றியாக அமையும். அமெரிக்காவின் மீதான சீனாவின் அச்சுறுத்தல் நடவடிக்கைகளை நான் தடுத்து வருகிறேன். அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த சீனாவுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். இதன் காரணமாக நமது விவசாயிகளுக்கு உதவ முடிந்தது. ஆனால் இந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றால் சீனா மீதான வர்த்தக வரிகளை அவர் நீக்கிவிடுவார் என தெரிவித்தார்.