அமெரிக்கா செல்வதற்கு அனுமதி பெற்றுள்ளேன்... எந்த பயணத் தடையும் எனக்கு இல்லை

கொழும்பு: அமெரிக்கா செல்வதற்கான அனுமதியைப் பெற்றதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். குடியகல்வு திணைக் களத்தின் கணினி வலையமைப்பில் ஏற்பட்ட முறைமை பிழையினால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு தாம் தடுத்து நிறுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய ரஞ்சன் ராமநாயக்க, அமெரிக்கா செல்வதற்கான அனுமதியைப் பெற்றதாக தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சரை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்காது குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் திருப்பி அனுப்பியதாக திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த விடயம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தனக்கு எந்த பயணத் தடையும் விதிக்கப்படவில்லை என்று தனது வழக்கறிஞர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்தே தான் அமெரிக்காவிற்கும், கனடாவிற்குமான பயணத்தைத் திட்டமிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி வலையமைப்பு புதுப்பிக்கப்படவில்லை என்பதே பிரச்சினையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.