பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுக்கு 8 பேர் பலி

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், வட கிழக்கு மாநிலங்களான பீகார், அசாம் போன்ற மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் அங்குள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில் மின்னல் தாக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பீகாரில் கனமழை காரணமாக அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த 8 பேரில், தலா 3 பேர் ஷேக்புரா மற்றும் ஜமுய் பகுதிகள், தலா ஒருவர் சிவான் மற்றும் பெகுசராய் பகுதிகளை சேர்ந்தவர்கள் என பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி நிதிஷ் குமார் தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். பீகாரில் கனமழை பெய்ய ஆரம்பித்தது முதல் மின்னல் தாக்கி பலர் உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது.