சென்னையில் 14 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு பலி

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்து 470 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 89 ஆயிரத்து 532 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,966 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 77 ஆயிரத்து 338 ஆக அதிகரித்துள்ளது. இதில் 58 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு நேற்றுவரை 1,253 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று காலை நிலவரப்படி 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் அரசு மருத்துவமனையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 5 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஒருவரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் தனியார் மருத்துவமனையில் 2 பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.