கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு... குதிரை சவாரி மீண்டும் துவங்கியது!

கொரோனா பரவல் குறைந்துள்ளதையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்றும், நேற்று முன்தினமும் கொடைக்கானலுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்தனர்.

இதனையடுத்து நகரில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் கடந்த 2 நாட்களாக நிரம்பி வழிந்தன. இதனை பயன்படுத்தி தனியார் காட்டேஜ்கள் மற்றும் வீடுகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இருப்பினும் அங்கும் அறை கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் குளிரில் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை முதல் கொடைக்கானலில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. பலத்த காற்று வீச்சு காரணமாக பாம்பார்புரம் பகுதியில் இருந்த ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

பகல் முழுவதும் வானில் அடர்ந்த மேக மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். இதற்கிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குதிரை சவாரி நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குதிரை சவாரி செய்து பொழுதை கழித்தனர்.