இலங்கையில், வரும் 30 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல்

இலங்கை: நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், வரும் 30 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதனை நிதி அமைச்சராக இருக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கே அவர்கள் தாக்கல் செய்ய உள்ளார்.

அதன்பின் செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். பொருளாதாரத்தை சீரமைக்கும் முயற்சியாக சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்காக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் 2021ஆம் ஆண்டிற்கான அதிகரிக்கப்பட்ட செலவீனமான 2,796.4 பில்லியன் ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது கூடுதலாக 929.4 பில்லியன் ரூபாய் தொகை பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு அனுமதி கோரப்படுகிறது. இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட கடன் வரம்பு 3,200 பில்லியன் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பட்ஜெட்டில் இந்த கடன் வரம்பில் 892 பில்லியன் ரூபாய் உயர்த்தப்படுகிறது. தினசரி மின்வெட்டு மற்றும் எரிபொருள், உணவு மற்றும் மருந்துகள் ஆகிய அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இடைக்கால பட்ஜெட் மூலம் நிவாரணம் வழங்க உள்ளதாக ரணில் விக்கிரமசிங்கே தகவல் தெரிவித்துள்ளார்.