இங்கிலாந்தில் தொலைக்காட்சி, இணையதளங்களில் துரித உணவுகளின் விளம்பரங்களை ஒளிப்பரப்ப தடை

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்துள்ளது. இருப்பினும் நாட்டில் கொரோனா தொற்றின் 2வது அலை வீசும் முன்பாக முடிந்தவரை மக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

கொரோனாபாதிப்புகள் மற்றும் மரணங்களுக்கு உடல் பருமன் ஒரு முக்கிய காரணி என்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளதால், மக்கள் உடல் பருமனை சரியாக கையாள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிர முக்கியத்துவம் அளித்து வருகிறது. தற்போது, துரித உணவுகள் விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இங்கிலாந்தில் இரவு 9 மணிக்கு முன்னர் தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்களில் துரித உணவுகளின் விளம்பரங்களை ஒளிப்பரப்ப தடை விதிக்கப்படும் என்ற அறிவிப்பை பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பகல் நேரத்தில் துரித உணவு விளம்பரங்களுக்கு தடை விதிக்கும் அரசின் திட்டம் குறித்து தற்போது உறுதியான தகவலை தெரிவிக்க முடியாது என இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரி ஹெலன் வாட்லி கூறுகையில், துரித உணவு சுகாதாரத் துறையால் கவனிக்கப்படும் விஷயங்களில் முக்கியமான ஒன்றாக உள்ளது. உதாரணமாக விளம்பரங்களில் இருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் ஆரோக்கியமற்ற உணவு விளம்பரங்களின் தாக்கம் குறித்து சுகாதாரத்துறை ஆலோசனை நடத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.