ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

சென்னை: ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆதித்யா ராம், அம்பாலால் உள்ளிட்ட 4 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனை கடந்த 14ம் தேதி முதல் நடந்து வருகிறது. 4வது நாளாக இன்றும் விசாரணை நடக்கிறது.வருமான வரி ஏய்ப்பு குறித்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை ஐயப்பன்தாங்கல், அண்ணாநகர் பகுதிகளில் உள்ள நிறுவன அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.சென்னையில் மட்டும் 20 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அம்பாலால் நிறுவனத்திற்கு சொந்தமான வளாகங்கள், அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அம்பாலால் நிறுவன வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 7½ கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்றொரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் போதிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதும் தெரியவந்துள்ளது. 4வது நாளாக சோதனை நடைபெற்று வரும் நிலையில், இந்த 4 நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.