வேதாரண்யம் சரணாலயத்தில் பறவைகள் வரத்து அதிகரிப்பு

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் மற்றும் வனவிலங்குகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை உள்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பலவிதமான பறவைகள் வந்து தங்கியிருந்து பின்னர் தங்கள் சொந்த ஊர்கள் மற்றும் சொந்த நாடுகளுக்கு திரும்பி செல்வது வழக்கம்.

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஈரான், ஈராக், சைபீரியா ஆகிய நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் வரும் நான்கு அடி உயரமுள்ள அழகுமிகு பூநாரை(பிளமிங்கோ) இந்த சரணாலயத்திற்கு தனி சிறப்பு சேர்க்கும். மேலும் லடாக்கில் இருந்து வரும் சிவப்பு கால் உள்ளான், ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் வரித்தலை வாத்து, இலங்கையில் இருந்து வரும் கடல்காகம், ஆர்க்டிக் பிரதேசத்தில் இருந்து வரும் ஆர்க்டிக்டேன் மற்றும் உள்நாட்டு பறவைகள் என 247 வகை பறவைகள் வந்து செல்கின்றன. இதில் 50 வகையான நிலப்பறவைகளும், 200-க்கும் மேற்பட்ட நீர்ப்பறவைகளும் அடங்கும்.

பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக கோடியக்கரையை ‘ராம்சார் சைட்’ என என இந்திய அரசு அறிவித்துள்ளது என்று 1976-ம் ஆண்டு முதல் கடந்த 41 ஆண்டு காலமாக இந்த பகுதியில் பறவைகளை ஆராய்ச்சி செய்து வரும் மும்பையை சேர்ந்த பறவை ஆராய்ச்சி விஞ்ஞானி பாலச்சந்திரன் தெரிவித்தார். இந்த ஆண்டும் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் வந்து குவிகின்றன.

இதுகுறித்து விஞ்ஞானி பாலச்சந்திரன் கூறியதாவது:- கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு தற்போது செங்கால் நாரை, கூழைக்கடா, கடல் ஆலா ஆகியவை அதிகளவில் வந்துள்ளன. மேலும் தற்போது 42 வகையான உள்ளான்கள் சுமார் 20 ஆயிரம் வந்துள்ளன.

ரஷ்யா, இந்தோனேஷியா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிறவி வகை பறவைகள் அதிக அளவில் வந்துள்ளன. இதேபோல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் விசில் தாரா பறவையும் தற்போது வந்துள்ளன. இந்த வகை பறவைகள் கோடியக்கரை, கெம்ப்லாஸ்ட் உப்பள நீர்த்தேக்கப்பகுதி, கோவைதீவு, நெடுந்தீவு, சிறுதலைக்காடு ஆகிய பகுதிகளில் காலை வேளையில் உணவு தேடும்போது பார்க்க முடியும்.

இந்த சரணாலயத்திற்கு ரஷ்யாவில் இருந்து 11 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறந்து வரும் கண்ணாடி மூக்கு உள்ளான் தற்போது அதிக எண்ணிக்கையில் வந்துள்ளன. பருவ காலம் முடிந்தவுடன் இந்த பறவைகள் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்து செல்கின்றன. பருவமழை நன்றாக இருந்தால் பறவைகள் வரத்து அதிகமாக இருக்கும் என அவர் கூறினார்.