ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் காய்கறி வரத்து அதிகரிப்பு

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது. இதனையடுத்து நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் செடிகளிலேயே காய்கறிகள் அழுகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

தொடர் மழையால் காய்கறிகள் சேதம் அடையும் என்பதால் விவசாயிகள் பலர் தங்களது தோட்டங்களில் பயிரிட்ட காய்கறிகளை முன்கூட்டியே அறுவடை செய்து வருகின்றனர். இதனால் கடந்த 2 நாட்களாக ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள மண்டிகளுக்கு காய்கறி வரத்து அதிகரித்து உள்ளதால் அதன் விலை சற்று குறைந்து உள்ளது. இருப்பினும் கேரட், உருளைக்கிழங்கு, அவரை விலை குறையாமல் அதே நிலையில் நீடிக்கிறது.

ஒரு கிலோ கேரட் ரூ.60 முதல் ரூ.100 வரை, பீட்ரூட் ரூ.35 முதல் ரூ.40 வரை, பீன்ஸ் ரூ.20, முள்ளங்கி ரூ.5 முதல் ரூ.10 வரை, காளிப்ளவர் ரூ.25 முதல் ரூ.30, நூல்கோல், டர்னீப் ரூ.15 முதல் ரூ.20, உருளைக்கிழங்கு ரூ.60 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக அவரை விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரு கிலோ அதன் தரத்துக்கு ஏற்ப ரூ.140 முதல் ரூ.200 வரை விற்பனை ஆனது. கேரட், உருளைக்கிழங்கு, அவரை போன்ற காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.