மேட்டூர் அணைக்கு வரும் நீா்வரத்து உயர்வு

சேலம்: கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்து வருவதை அடுத்து அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு கொண்டு வருகிறது.

இதனால் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது. இதனை அடுத்து நேற்று காலை வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக சரிந்த நீர்வரத்து நேற்று இரவு வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாகவும், இன்று காலை வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாகவும் உயர்ந்துள்ளது.

மேலும் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து உயர்ந்துள்ளதால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி நீரும், உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 27 ஆயிரம் கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

இதை தொடர்ந்து மேட்டூர் அணையில் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆகவும் உள்ளது.