சென்னையில் 10 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் புதிதாக 1, 248 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் நேற்று 1427 பேர் கொரோனா தொற்றிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னையில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 7 நாட்களில் 10 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது எனவும், 4 மண்டலங்களில் பாதிப்பு குறைந்துள்ளது எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி கூறியுள்ளதாவது:-

ஆலந்தூர் மண்டலத்தில் 4.7 சதவீதம், தேனாம்பேட்டை மண்டலத்தில் 4.3 சதவீதம், திருவொற்றியூர் மண்டலத்தில் 3.8 சதவீதம், ராயபுரம் மண்டலத்தில் 3.6 சதவீதம், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 2.1 சதவீதம் கொரோனா பாதிப்பு கடந்த 7 நாட்களில் அதிகரித்துள்ளது.

மேலும் திரு.வி.க நகர் மண்டலத்தில் 1.4 சதவீதம், அடையாறு மண்டலத்தில் 1.2 சதவீதம், அண்ணாநகர் மண்டத்தில் 0.7 சதவீதம், மாதவரம் மண்டலத்தில் 0.6 சதவீதம், கோடம்பாக்கம் மண்டலத்தில் 0.1 சதவீதமும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

இதேபோல் தண்டையார்பேட்டை மண்டலத்தில் 0.4 சதவீதம், பெருங்குடி மண்டலத்தில் 0.8 சதவீதம், மணலி மண்டலத்தில் 1.7 சதவீதம், வளசரவாக்கம் மண்டலத்தில் 2.7 சதவீதமும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. அம்பத்தூர் மண்டலத்தில் கடந்த 7 நாட்களில் ஒரு பாதிப்பும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.