சென்னை புறநகர் பகுதிகளில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடும் வேகமாக பரவி வருகிறது. சென்னைக்கு அடுத்தப்படியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,230 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், மேடவாக்கம், குரோம்பேட்டை, பெரும்பாக்கம், கவுரிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதில் தாம்பரம், பல்லாவரம் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டி உள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி தாம்பரத்தில் 112 பேருக்கும், பல்லாவரத்தில் 108 பேருக்கும், பம்மலில் 34 பேருக்கும், அனகாபுத்தூரில் 17 பேருக்கும் நோய் தொற்று உறுதியாகி இருந்தது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையில் அதிகரித்த நோய் தொற்று தற்போது வேகமாக உயர்ந்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.