கடல் சார்ந்த உணவு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்

நாமக்கல்: மத்திய அமைச்சர் பெருமிதம்... 'கடல் மற்றும் கடல் சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதில், இந்தியா உலகிலேயே முதலிடத்தில் உள்ளது,'' என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு துறை இணை அமைச்சர் முருகன் கூறினார்.

இதுகுறித்து அவர் நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது: நாமக்கல்லுக்கு என பிரத்யேகமாக, தேசிய பால்வள வாரியம் வழங்கும் கடன் உதவியுடன், 89 கோடி ரூபாய் மதிப்பில், புதிய ஆவின் பால் பண்ணை அமைக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக, 64 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஆவின் பால் பண்ணை அமைக்க நிலம் கிடைத்தவுடன், 18 மாதத்தில், ஆவின் பால் பண்ணை அமைக்கப்படும். இதன்மூலம் பால் சுத்திகரிப்பு, பால் உப பொருட்கள் தயாரிப்பு மேம்படும்.

நாமக்கல் மாவட்டத்தில், பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்கும். வேலை வாய்ப்பு, பொருளாதாரம் உயரும். 'ராஷ்ட்ரிய கோகுல் மிஷின்' திட்டத்தில், பண்ணையாளர்கள், தனிநபர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் ஒவ்வொருவரும், 200 நாட்டு பசு மாடுகள் வளர்க்க, மத்திய அரசு, 50 சதவீதம் மானியம் வழங்குகிறது. கடனுதவியும் வழங்கப்படுகிறது.

தேசிய மீன்வளவாரியத்தில், 7,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்துக்கு மட்டும், 1,800 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. கடல் மற்றும் கடல் சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதில், இந்தியா உலகில் முதலிடம் வகிக்கிறது.

மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்ததுபோல், கொச்சின், சென்னை, விசாகப்பட்டினம், பாரதீப், (பெட்டுவா காட்) மேற்குவங்கம் ஆகிய, ஐந்து மீன்பிடி துறைமுகங்கள், தலா, 100 கோடி ரூபாய் மதிப்பில், நவீனப்படுத்தப்பட உள்ளன. கடல்பாசி தொழிலை மேம்படுத்த, 120 கோடி ரூபாய் மதிப்பில், ராமேஸ்வரத்தில், திட்டத்திற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடக்கிறது.

நாடு முழுவதும், கால்நடைகளை பாதுகாக்க, கோமாரி நோய் தடுப்பூசி, 100 சதவீதம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல்லுக்கு தனியாக வானொலி நிலையம் தேவை ஏற்படும் பட்சத்தில், அதுகுறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.