கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளால் நன்மை அடையாத நாடு இந்தியாதான் - ப.சிதம்பரம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவ ஆரம்பித்தது முதலே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார சரிவை மீட்டெடுக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர. தற்போது கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்துள்ளது.

இந்நிலையில், முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், செப்டம்பர் 30 க்குள் மொத்த தொற்றுநோய்களின் பாதிப்பு எண்ணிக்கை 55 லட்சத்தை எட்டும் என்று நான் கணித்திருந்தேன். நான் கணித்தது தவறு. செப்டம்பர் 20 க்குள் இந்தியா அந்த எண்ணிக்கையை எட்டும். செப்டம்பர் இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 65 லட்சத்தைத் தொட்டுவிடும் என்று தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு நடவடிக்கைகளின் நன்மையை அறுவடை செய்யாத ஒரே நாடு இந்தியாதான் என்று தோன்றுகிறது. 21 நாளில் கொரோனா வைரசை தோற்கடித்து விடுவோம் என்று வாக்குறுதி அளித்த பிரதமர் மோடிதான், மற்ற நாடுகள் இதில் வெற்றிகண்டபோது இந்தியா மட்டும் ஏன் தோல்வி கண்டது என்பதை விளக்க வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் மற்றொரு டுவிட்டர் பதிவில், 2020-2021 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இதுவரை இல்லாத வகையில் எதிர்மறை வளர்ச்சியை அடைந்திருப்பதை விளக்க நிதி அமைச்சகத்திடம் ஒரு வார்த்தை இல்லை. ஆனால் இந்திய மக்களை தவறாக வழிநடத்தும் பழைய விளையாட்டுக்கு திரும்பி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள சரிவிலிருந்து மீண்டும் மீட்சி பெறுவோம் என்று கணித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.