உலக அளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பட்டியலில் இந்தியா 2-வது இடம்

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் உலகின் 200 நாடுகளுக்கு மேல் பரவிமனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. இருப்பினும் இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் அதிகளவில் உள்ளது. உலகளவில் கொரோனாவில் இருந்து வீடு திரும்பியோரின் பட்டியலில் பிரேசில்முதல் இடத்தில் உள்ளது. பிரேசிலில் 32.26 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளான நிலையில், 26.16 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

பிரேசிலை தொடர்ந்து கொரோனாவில் இருந்து வீடு திரும்பியோரின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி, தொற்றுக்கு 25.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 18 லட்சத்து 8 ஆயிரத்து 936 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவிற்கு அடுத்தபடியாக அமெரிக்கா 3-ம் இடத்தில் உள்ளது.

நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 57 ஆயிரத்து 381 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இந்தியாவில் கொரோனாவின் மீட்பு விகிதம் என்பது 71.61 சதவீதமாக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைவதில் தேசிய சராசரியை விட தமிழகம் உள்பட 30 மாநிலங்கள் சாதனை படைத்துள்ளன. முதல்லிடத்தில் உள்ள டெல்லியில் மீட்பு விகிதம் 89.87 சதவீதம், இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்தில் மீட்பு விகிதம் 81.62 சதவீதம் ஆகும். குஜராத் 77.53 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.