இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இந்தியருக்கு சிறை தண்டனை

குடிபோதையில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இந்தியருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

துபாயில் வீட்டுக்கு அருகே உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இளம்பெண்ணை குடிபோதையில் பலாத்காரம் செய்ய முயன்ற இந்தியருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பர்துபாயில் கடந்த ஜூன் மாதம் இந்த சம்பவம் நடந்தது. சம்பவத்தன்று இரவு 10.30 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் வீட்டுக்கு அருகே உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த 40 வயதான ஒருவர் அந்த இளம்பெண்ணை திடீரென கட்டிப்பிடித்து, நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் என்று கூறி மானபங்கம் செய்ய முயன்றார்.

அந்த இளம் பெண் அதிர்ச்சியடைந்து கூக்குரலிட்டார். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். உடனே அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து அறிந்தவுடன் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் பரிசோதித்தனர். அந்த இளம்பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றது அப்பகுதியில் வசிக்கும் ஒரு இந்தியர் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். இளம் பெண்ணின் அழகில் மயங்கிதால் தான் அந்த தவறை செய்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

மேலும் அவர் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. நடந்த தவறுக்கு அந்த இளம்பெண்ணிடம் அவர் மன்னிப்பு கேட்டார். இந்த வழக்கு துபாய் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்தியருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து 15 நாட்களுக்குள் மேல் நீதிமன்றத்தை அணுகவும் அவருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.