இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் நோய்த்தொற்று உறுதி செய்யப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
நாடு முழுவதும் கடந்த இரண்டு வாரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. மே 6ம் தேதி காலை நிலவரப்படி மொத்தம் 49,391 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 1694 பேர் பலியாகியிருந்தனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14,182 ஆக இருந்தது.
இந்நிலையில் 14-ம் நாளான இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி மொத்தம் 101139 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3163 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 39174 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதன் மூலம் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை 14 நாட்களில் இருமடங்காகியுள்ளது தெரியவந்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் விபரம்:- மகாராஷ்டிரா - 35058 தமிழ்நாடு - 11760 குஜராத் - 11745 டெல்லி- 10054 ராஜஸ்தான் - 5507 மத்திய பிரதேசம் - 5236 உத்தர பிரதேசம் - 4605 மேற்கு வங்காளம் - 2825 ஆந்திரா - 2474 பஞ்சாப் - 1980 தெலுங்கானா - 1597