திருமண ரத்து குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்த தகவல்

புதுடில்லி: உச்சநீதிமன்றம் தகவல்... சீர்செய்ய முடியாத அளவுக்கு முறிந்துவிட்ட திருமணங்களை, ஆறு மாதம் காத்திருக்காமல் உடனடியாக ரத்து செய்யும் உரிமை தனக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

பரஸ்பர சம்மதத்துடன் விவகாரத்து கேட்டு வழக்குத் தொடுப்பவர்கள், 6 மாதம் கட்டாயம் காத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது.

ஆனால் 142-வது சட்டப்பிரிவின் கீழ் தரப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உடனடியாக விவாகரத்து வழங்க உச்சநீதிமன்றம் முன்வர வேண்டும் என்று கோரி சில ஆண்டுகளுக்கு முன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இது தொடர்பான வழக்கு 2016-இல் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. வழக்கை பரிசீலித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தற்போது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். அதில், சீர்செய்ய முடியாத அளவுக்கு திருமணம் முறிந்துவிட்ட சூழல்களில், 6 மாத காத்திருப்பு காலம் அவசியமற்றது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இது தொடர்பான உத்தரவைப் பிறப்பிக்க உச்சநீதிமன்றத்துக்கு உரிமை உண்டு என்று தெரிவித்துள்ள நீதிபதிகள், சீர் செய்ய முடியாத திருமணங்கள் என்று எந்த அடிப்படையில் முடிவு செய்வது என்ற காரணிகளையும் தங்கள் உத்தரவில் பட்டியிலிட்டுள்ளனர்.