அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய மசகு எண்ணெய் நிலையம் அமைக்கப்பட உள்ளதாக தகவல்

கொழும்பு: புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்... அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை நாட்டில் ஸ்தாபிக்கவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

சீன முதலீடாக நாளாந்தம் 4 டொன் மசகு எண்ணெய் சுத்திகரிக்கக்கூடிய அதி நவீன தொழில்நுட்பத்துடனான சுத்திகரிப்பு மத்திய நிலையம் ஒன்று நாட்டில் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் ச்சீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.

மல்வத்த மகாநாயக்கர்களை சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தற்போதுள்ள மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மிக பழமையானது என சீன தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் எரிபொருள் விநியோகத்துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில் 120 முதல் 140 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடு சீனாவினால் நாட்டில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் ஊடாக பல புதிய தொழில்வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறக்கூடும் எனவும் இலங்கைக்கான சீன தூதுவர் ச்சீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.