மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்... யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டியது அவசியம் என மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்தார்.

இராணுவத்தினரால் வடமராட்சி பகுதியில் அமைக்கப்பட்ட வீடுகளை வீட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

நாட்டில் கொரோனா தொற்று மிகவும் வலுவடைந்து வருகின்றது. அதேபோல வடக்கினை பொறுத்தவரைக்கும் அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படாவண்ணம் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

யாழ்.மாவட்டத்தினை பொறுத்தவரைக்கும் இரண்டு தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒன்று விடத்தல்பளை தனிமைப்படுத்தல் முகாம். மற்றது கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி தனிமைப்படுத்தல் முகாம். தேசிய கல்வியற் கல்லூரி தனிமைப்படுத்தல் முகாமிற்கு நேற்று முன்தினம் 108 பேர் கொண்டுவரப்பட்டுள்ளார்கள்.

எனவே யாழ்ப்பாண மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கொரோனா தொற்று ஏற்படாவண்ணம் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக வடக்கு மக்களுக்கு இன்னொரு அச்ச நிலைமை காணப்படுகின்றது. தென்னிந்திய மீனவர்களுடன் தொடர்புகளைப் பேணும் போது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியுள்ளது என்றார்.