மழையின் தீவிரம் குறைந்தது... மேட்டூருக்கு வரும் நீர்வரத்தும் குறைந்தது

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது... காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் தீவிரம் குறைந்துள்ளது.

இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று காலை வினாடிக்கு 85 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக சரிந்தது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு தொடர்ந்து அதே அளவு தண்ணீர் வந்தது. இதையடுத்து, காலை 9.30 மணியளவில் இந்த நீர்வரத்து மேலும் சரிந்து அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணைக்கு வரும் தண்ணீர் நேரடியாக மேட்டூர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

இதில், நீர்மின் நிலையங்கள் மூலம் வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடியும், 16 மதகுகள் மூலம் வினாடிக்கு 8 ஆயிரத்து 500 கன அடியும், கால்வாயில் வினாடிக்கு 200 கன அடியும் என மொத்தம் 50 ஆயிரத்து 200 கன அடி வீதம் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் 14வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.