சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்ப உள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் தகவல்

வாஷிங்டன்: முதல்நாள் ஒளிப்பரப்பப்படும்... அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி வருகைக்கு முதல் நாள், சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்ப உள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் அறிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் வரும் 21ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். அதற்கான ஏற்பாடுகளை இருநாட்டு தலைமையும் மேற்கொண்டுள்ளன. கடந்த 2002ல் நடந்த குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை பிபிசி நிறுவனம் இரண்டு பகுதிகளாக கடந்த ஜனவரியில் வெளியிட்டது.

இந்த ஆவணப்படத்தில், அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி, கலவரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்த ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு தடை விதித்திருந்தது.

இந்த நிலையில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம் ெவளியிட்ட அறிவிப்பில், ‘பிபிசி தயாரித்துள்ள ‘இந்தியா: மோடிக்கான கேள்வி’ என்ற ஆவணப்படம், வரும் 20ம் தேதி அமெரிக்காவில் ஒளிபரப்பப்படும். இந்த ஆவணப்படத்தை பார்ப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மே மாதம், பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, பிபிசி தயாரித்த ஆவணப்படம் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் திரையிடப்பட்டது. அப்போது, இந்தியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் மற்றும் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுதல் பிரதமர் மோடியுடன் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் கோரிக்கை எழுப்பப்பட்டது.