பாகிஸ்தானுக்கு ரூ.24 ஆயிரம் கோடி கடன் உதவி வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு ரூ.24 ஆயிரம் கோடி கடன் உதவியை சர்வதேச நாணய நிதியம் வழங்குகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இன்று முதல் கட்டமாக 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.9,800 கோடி) வழங்கப்பட உள்ளது. இது நடுத்தர கால பொருளாதார சவால்களை உடனடியாக சமாளிக்க உதவும்.

பாகிஸ்தானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசியப் பொருட்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், கடன் உதவி வழங்குமாறு, சர்வதேச நாணய நிதியத்திடம், பாகிஸ்தான் அரசு கோரிக்கை விடுத்தது. ஐஎம்எஃப் கடன் வழங்குவது தொடர்பாக பல்வேறு நிபந்தனைகளை விதித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.24 ஆயிரம் கோடி) கடன் உதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.9,800 கோடி) வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள தொகை அடுத்த 9 மாதங்களில் வழங்கப்படும்.