இலவசத்தை தடுக்க வழி உண்டா? மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்

புதுடில்லி: இலவசத்தை தடுக்க வழி உண்டா... தேர்தல் பிரசாரத்தின்போது வாக்காளர்களுக்கு தரும் இலவசங்களை தடுக்க வழி உண்டா என மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.

தேர்தல்களின் போது மக்களைக் கவரும் வகையில் பல இலவசங்களை அரசியல் கட்சிகள் அறிவித்திருந்தன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தேர்தல் பிரசாரங்களின் போது அரசியல் கட்சிகள் பல இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்த இலவச அறிவிப்புகளால் மாநிலத்தின் கடன் சுமை அதிகமாகும்.

மக்களின் வரிப் பணத்தில் இருந்து இலவச பொருட்களை தருவதாக அறிவிப்புகளை வெளியிடுவது ஜனநாயக மதிப்புகளை சீர்குலைப்பதாகும். இலவச அறிவிப்புகளை எந்த அரசியல் கட்சிகளும் அறிவிக்கக் கூடாது; அவ்வாறு அறிவித்தால் கட்சியின் சின்னம் முடக்க சட்டத் திருத்தம் வேண்டும். மேலும் கட்சி தேர்தல் அங்கீகாரத்தையும் ரத்து செய்ய தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, ஹீமா கோஹ்லி அமர்வு முன் கடந்த ஜனவரி 25-ம் தேதி விசாரணைக்கு போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: இந்த வழக்கில் சில சட்ட ரீதியான கேள்விகள் எழுகின்றன. இதுபோன்ற அறிவுப்புகளை வெளியிடுவதை யார் கட்டுப்படுத்துவது என்ற கேள்வி எழுகிறது. இலவச அறிவிப்புகளை வெளியிடுவதற்கு உடனடியாக தடை விதிக்க முடியாது.

முதலில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் தேர்தல் கமிஷன் தன் தரப்பு வாதங்கள் முன் வைக்கட்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் கூறியதாவது: ஓட்டு வங்கிக்காக இலவசங்கள் என்ற வாக்குறுதியைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தான் வழிவகை செய்ய வேண்டும் என்றனர். மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் வாதிடுகையில், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தீர்க்க வேண்டும் என்றார். இலவசங்கள் தொடர வேண்டுமா? வேண்டாமா என்று நீங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுங்கள். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.