பிரிஜ்பூஷனை காப்பாற்ற மத்திய அரசு முயல்வதாக குற்றச்சாட்டு

உத்தரகாண்ட்: மல்யுத்த சம்மேளன தலைவரை காப்பாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது என்று விவசாய சங்கத் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது பாலியல் தொந்தரவு, மிரட்டல் புகார் கூறி, அவரை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அவர்களுக்கு விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கிசான் மகாகும்ப் எனப்படும் 3 நாள் விவசாயிகள் சபை கூட்டத்தையொட்டி பாரதீய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘பிரிஜ் பூஷனை காப்பாற்றுவதில் மத்திய அரசு மும்முரமாக உள்ளது. அது, அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையிலேயே தெரிகிறது. ஒருவரை காப்பாற்ற அரசு முடிவெடுத்துவிட்டால், அதற்கு பல வழிகள் இருக்கின்றன. மல்யுத்த வீரர், வீராங்கனைகள் எந்த முடிவை எடுத்தாலும் அதற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம்.’ என்றார்.