பிப்ரவரியில் இந்தியாவின் மின்நுகர்வு அதிகரித்துள்ளதாக தகவல்

புதுடில்லி: 9 சதவீதம் அதிகரிப்பு... பிப்ரவரியில் இந்தியாவின் மின் நுகர்வு 9% அதிகரித்து, 11.78 ஆயிரம் கோடி மின் அலகுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மத்திய அரசின் புள்ளி விவரம் கூறியதாவது: இந்தியாவில் மின் நுகர்வு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 2022 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மின் நுகர்வு 9 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 2022ல் பயன்படுத்தப்பட்ட மின்சார யூனிட் அளவு 10.80 ஆயிரம் கோடி. இந்த ஆண்டு 11.78 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய நிலையைப் பார்க்கும்போது, 2020 பிப்ரவரியில் மொத்த மின்சார யூனிட் பயன்பாடு 10.38 ஆயிரம் கோடியாக இருந்தது. பிப்ரவரி 2021 இல் 10.32 ஆயிரம் கோடிகள்.

மின் நுகர்வு அதிகரிப்பு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஸ்திரமாக இருப்பதைக் காட்டுவதாகக் கூறும் வல்லுநர்கள், இந்த மார்ச் மாதத்தில் மின் நுகர்வு இன்னும் அதிகரிக்கும் என்று தெரிவித்தனர்.

பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகள் அதிகரித்து மார்ச் மாதம் சூடுபிடிப்பதால் இந்த உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர். அதேபோல், வரும் கோடை காலத்தில் நாட்டில் மின் தேவை மற்றும் பயன்பாடு அளவு அதிகரிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.