ஜனாதிபதி 247 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்

புதுடெல்லி: 247 மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா நேற்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:- 2014 முதல் 2022 வரை பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து அனுப்பப்பட்ட 247 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

அவற்றில் 24 மசோதாக்கள் குஜராத்தில் இருந்தும், 23 மசோதாக்கள் உத்தரபிரதேசத்திலிருந்தும், 22 மசோதாக்கள் மகாராஷ்டிராவிலிருந்தும் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், 2014-2022 க்கு இடையில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 95 மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு பரிசீலனையில் உள்ளன.

உத்தரபிரதேசத்தில் இருந்து 11 மசோதாக்கள், மகாராஷ்டிராவில் இருந்து 10 மற்றும் ஆந்திராவில் இருந்து 9 மசோதாக்கள் அடங்கும். இந்த 95 மசோதாக்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் ஆலோசனை நடந்து வருகிறது.

அவர்களில் யாராவது கேள்விகளை எழுப்பினால், குறிப்பிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து விளக்கம் மற்றும் கருத்து கேட்கப்படும். மசோதாக்களுக்கு கால அவகாசம் தேவைப்படுவதால் ஒப்புதல் பெற காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.