எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வரானால்தான் மழை பெய்யுமாம்; அமைச்சர் சொல்கிறார்

அமைச்சரின் பகீர் பேச்சு... எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆனால் தான் நாட்டில் மழை பெய்யும் என அமைச்சர் கருப்பணன் பேசியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே செந்தாம்பாளையத்தில் நெசவாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் தேர்தலில் அனைவரும் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும். அப்படி வாக்களித்தால் பொதுமக்களுக்காக பல சலுகைகள் காத்திருக்கிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , தன் உயிரைப்பற்றி கவலைப்படாமல் மாவட்டம் தோறும் ஆய்வு செய்து வருகிறார் என்று கூறிய அமைச்சர், அதிமுகவில் சேர திமுகவினர் பலரும் ஆவலாக உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வர வேண்டும். அப்படி அவர் வந்தால் தான் நாட்டில் மழை பெய்யும் என்று அவர் கூறினார். அமைச்சரின் இந்த பேச்சு மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.