இறந்தவர்கள் உடல் உறுப்புகளை திருடி விற்று வந்த 4 மருத்துவர்களுக்கு சிறை

மருத்துவர்கள் கைது... சீனாவில் இறந்தவர்களின் உடல் உறுப்புகளை திருடி சட்டவிரோதமாக விற்று வந்த மருத்துவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

உலகின் பல்வேறு நாடுகளில் உயிரிழந்தவர்களின் உடலில் இருந்து உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு, தேவையானவர்களுக்கு பொருத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது போன்ற உடல் உறுப்பு தானத்தை சீனாவில் இருக்கும் சில மருத்துவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, உடல் உறுப்புகளை திருடி விற்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுகுறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கார் விபத்து மற்றும் மூளை பாதிப்புக்குள்ளாகி இறந்தவர்களின் உடல்களில் இருந்து உறுப்புகள் அகற்றப்பட்டு பணத்திற்காக விற்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக நான்கு மருத்துவர்கள் உட்பட் ஆறு பேர் கொண்ட குழு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தண்டனை பெற்ற மருத்துவர்கள், பெங்பூ நகரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உயர் பதவியில் உள்ளவர்கள். இறந்தவர்களின் குடும்பங்களிடம் இருந்து போலியான அதிகாரப்பூர்வ உறுப்பு நன்கொடை ஒப்பந்தங்களில் கையெழுத்து வாங்கி அதன் பின் அதை ஆம்புலன்ஸ் ஒன்றில் ஏற்றிச் செல்வது போன்று நாடகமாடியுள்ளனர்.

போக்குவரத்து விபத்துக்கள் மற்றும் பெருமூளை இரத்தப்போக்கு காரணமாக இறந்த 11 பேரின் உறுப்புகள் சுய லாபத்திற்காக விற்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட இவர்கள் சடலங்களை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, சுமார் 10 முதல் 28 மாதங்களுக்கு இடையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கும்பலுக்கு, ஹுவாங் சின்லி மற்றும் லு சென் ஆகிய இரு மருத்துவர்களால் தலைமை தாங்கியுள்ளனர். இவர்கள் இதற்கு முன்பு குறித்த மருத்துவமனைகளுக்காக உறுப்பு கொள்முதல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

Shi Xianglin என்ற நபர் தன்னுடைய அம்மாவின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதை அறிவதற்காக நாட்டின் அதிகாரப்பூர்வ உறுப்பு நன்கொடையாளர் பட்டியலில் தேடியுள்ளார். அப்போது அவரின் அம்மா பெயர் இல்லை என்பதால், இது குறித்து அவர் சுகாதார மற்றும் சட்ட அதிகாரிகளிடம் தெரிவித்த பின்னர், இது அம்பலமாகியுள்ளது.

இது குறித்த வழக்கு கடந்த ஜுலை மாதம் அங்கிருக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இதை எதிர்த்து மேல் முறையீடு செய்த நிலையில், அதை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இதில், ஹுவாங் சின்லி இரண்டு ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனையும், அதே நேரத்தில் வாங் என்ற மற்றொரு மருத்துவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு மருத்துவர் யாங் சுக்சன், இரண்டு ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்கள் சிறை தண்டனையும், மருத்துவர் லுவுக்கு ஒரு வருடம் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

மருத்துவ உபகரணங்கள் கொண்டு செல்வதற்கு உதவிய ஹுவாங் சாயாங் மற்றும் போலி ஆம்புலன்ஸ் உரிமையாளர் ஓ யாங் ஆகியோருக்கு 10 மற்றும் 13 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.