8வது முறையாக நீட்டிப்பு கேட்டு தமிழக அரசுக்கு நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடிதம்

8வது முறையாக நீட்டிப்பு கேட்டு கடிதம்... முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் 8ஆவது முறையாக காலநீட்டிப்பு கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சென்னையில் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017-ம் ஆண்டு தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது. இது தொடர்பாக ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், அமைச்சர்கள் என 150-க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் இதுவரை விசாரணை நடத்தியுள்ளது.

மேலும், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவர்கள் உள்பட அரசு அதிகாரிகள் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்குமாறு அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு விசாரணையின்போது, ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், ஏற்கனவே 4 முறை அவகாசம் நீடிக்கப்பட்ட நிலையில் மேலும் 3 முறை 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடைசியாக நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் வரும் நாளையுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், மேலும் கால நீட்டிப்பு கேட்டு தமிழக அரசுக்கு விசாரணை ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.