துல்லியமாக கொரோனா தொற்றை கண்டுபிடிக்கும் ‘கே-9’ மோப்ப நாய்கள்

குற்ற புலனாய்வுத்துறையில் போலீசாருடன் இணைந்து பணியாற்றுவதில் மோப்ப நாய்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். அனைத்து நாடுகளிலும் போலீஸ் மற்றும் ராணுவத்தில் இந்த மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை ‘கே-9’அல்லது ‘கேனைன்’ என்று அழைக்கப்படுகிறது. அமீரகத்திலும் போலீஸ் துறையில் ‘கே-9’ என்ற மோப்ப நாய் பிரிவு சிறப்புடன் செயல்படுகிறது.

கடந்த 1976-ம் ஆண்டு அமீரகத்தில் முதல் முறையாக 6 நாய்கள் மற்றும் 6 பயிற்சியாளர்களுடன் இந்த மோப்ப நாய்கள் பிரிவு துபாய் போலீசில் சேர்க்கப்பட்டது. அதன்பின், அமீரகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த ‘கே-9’ மோப்ப நாய் பிரிவு தொடங்கப்பட்டது. தற்போது ‘கே-9’ மோப்ப நாய் படை பிரிவில் ஜெர்மன் செப்பர்டு, மலினோய்ஸ் மற்றும் லாப்ரடார் வகை மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகிறது.

உயர் வகை மோப்ப நாய்களுக்கு மூக்கில் 25 கோடி உணரும் செல்கள் உள்ளது. இந்நிலையில் இந்த நாய்களை வைத்து கொரோனா தொற்றை கண்டுபிடிக்க உள்துறை அமைச்சகம் சார்பில் பல்வேறு சோதனைகள், பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்த பரிசோதனைகள் அனைத்தும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை அனுமதிக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனைகளில் செய்துபார்க்கப்பட்டது.

மனித உடலில் இருந்து வெளியேறும் வாசனையை மோப்பம் பிடித்து இந்த நாய்கள் கொரோனா தொற்றை துல்லியமாக உணருகின்றன. தற்போது அமீரக சுகாதார அமைச்சகம், சுங்கத்துறை, அபுதாபி, துபாய் சுகாதார ஆணையங்கள் ஒத்துழைப்பில் உள்துறை அமைச்சகத்தின் சார்பில், வணிக வளாகங்கள், பொது இடங்கள் மற்றும் விமான நிலையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்த மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுவதாக அமீரக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.