அடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம்; கமல்ஹாசன் டுவிட்டால் பரபரப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று முன் தினம் தனது பிறந்த நாளை கொண்டாடினர். அவருக்கு ரசிகர்கள், கட்சி தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பிக்பாஸ் போட்டியாளர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறிய கமல்ஹாசன், தனது டுவிட்டரில் 'அடுத்த பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடுவோம்' என்று கூறியுள்ளார். கமல்ஹாசனும் அவருடைய கட்சியும் வரும் தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில் அவர் இந்த டுவிட்டை பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் அந்த டுவிட்டில் கூறியிருப்பதாவது:- என்னுடைய பிறந்தநாளுக்கு நேரிலும், தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வாழ்த்திய ரசிகர்கள், நண்பர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர், பிற துறை ஆளுமைகள், ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் பிறந்த நாளை 'நற்பணி' தினமாகக் கொண்டாடிய எங்கள் மக்கள் நீதி மய்யத்தின் சகோதரர்களை மனதாரத் தழுவிக்கொள்கிறேன். உங்கள் அன்பிற்கு மென்மேலும் தகுதியுடையவனாக என்னை ஆக்கிக்கொள்ள 'உள்ளும் புறமும்' சீரமைப்பேன். அடுத்த பிறந்தநாளை 'கோட்டையில் கொண்டாடுவோம்’ என்று கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார்.