மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மறைவிற்கு கமல் இரங்கல்

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மறைவிற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நீட் தேர்வுக்கு ஆயத்தமாகி வந்த அரியலூர் மாணவன் விக்னேஷ் என்பவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து, நேற்று மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்டார்.

மாணவியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வரும் அரசியல் தலைவர்கள், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில், நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் இறப்பே இறுதியாக இருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே #NEET தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன? மத்திய மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும். நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும், மன வலிமையையும் தர வேண்டியது நம் கடமை. செய்வோம் அதை!,” எனக் குறிப்பிட்டுள்ளார்.