துணை ஜனாதிபதிக்கு போட்டியிடும் கமலா ஹாரிசால் ஒருபோதும் ஜனாதிபதியாக முடியாது - டிரம்ப்

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதிக்கு தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இந்நிலையில், கொரோனா தடுப்பூசி பற்றி ஜனாதிபதி டிரம்ப் கூறும் கருத்துகளை தான் நம்ப போவதில்லை என கமலா ஹாரிஸ் கூறினார்.

கமலா ஹாரிஸின் இந்த கருத்து டிரம்புக்கு கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர் கமலா ஹாரிசை அவர் கடுமையாக விமர்சித்தார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் டிரம்ப் பேட்டி அளிக்கையில், தடுப்பூசி பற்றி இழிவாக பேசிவிட்டார், இதன் மூலம் இந்த சாதனையை மக்கள் ஏற்காதவண்ணம் அவர் பேசியுள்ளார். இது எனக்கான சாதனையல்ல, மக்களுக்காக நிகழ்த்தப்பட்ட சாதனை. மக்களை நோயிலிருந்து மீட்பதற்கான சாதனை. சிகிச்சையிலும் நாம் நன்றாகவே திகழ்கிறோம் என்று கூறினார்.

நவம்பர் 3 தேர்தலுக்கு முன்பாகவே கொரோனா தடுப்பூசி மக்களுக்கு கிடைத்து விடும் என்பது எதிர்க்கட்சியினரை பதற்றப்படுத்துகிறது. டிரம்ப் சாதித்து விட்டார் என்று நினைத்து விடப்போகிறார்கள் எனவே தடுப்பூசியை இழிவுபடுத்துவோம் என்று அவர்கள் முடிவெடுத்து பேசி வருகின்றனர். இது நாட்டுக்கு நல்லதல்ல, உலகிற்கே அவர்கள் பேச்சு நல்லதல்ல என டிரம்ப் கூறியுள்ளார்.

மேலும் அவர், மக்கள் நலனுக்கு எதிராக தடுப்பூசி குறித்து இழிவாகப் பேசியதற்கு பைடனும், ஹாரிசும் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். கமலா ஹாரிசுக்கு ஜனாதிபதியாகும் எண்ணம் இருக்கிறது. ஆனால் அவர் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால் தான் கூறுகிறேன் ஒருபோதும் அவரால் ஜனாதிபதியாக முடியாது என்று தெரிவித்துள்ளார்.