ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன் - கமலஹாசன் அதிரடி டுவிட்

சமீபத்தில் உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது. தனக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசனுக்கு நன்றி என சூரப்பா தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த வீடியோ குறித்து சமூக வலைத்தளங்களில் ஒருசில நெட்டிசன்கள் அடித்த கமெண்ட்டில் கமலஹாசன் அவர்கள் பாஜகவின் 'பி' டீம் என கேலியும் கிண்டலும் செய்தனர்.

இந்த விமர்சனத்துக்கு அவ்வப்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் பதிலடி கொடுத்து வந்தனர். இந்த நிலையில் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:-

அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது. வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை.

திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா? தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம். ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன். நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த கமல்ஹாசனின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.