குளம்போல் காட்சியளிக்கும் கன்னியாகுமரி... தீவிர கண்காணிப்பில் கடலோர பாதுகாப்பு படை

நிவர் புயல் கரையை கடக்கும் நிலையில் கன்னியாகுமரி கடல் அலையின்றி குளம்போல் காட்சியளித்துள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

நிவர் புயல் இன்று கரையை கடக்கும் என்றும், அப்போது கடலோர பகுதிகளில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் சூறாவளியுடன் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் அலைகள் இன்றி குளம் போல் காட்சி அளித்தது.

குறிப்பாக இந்தியபெருங்கடல், வங்க கடல், அரபிக்கடல் ஆகிய 3 கடல்களும் அலைகள் ஏதுமின்றி அமைதியாக இருந்தன. இதனால் என்ன நடக்குமோ? ஏது நடக்குமோ? என்று பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் கன்னியாகுமரி போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.