திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

திருப்பூர்: கடத்தப்பட்ட குழந்தையை மீட்ட போலீசார்... திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று மாலை கடத்தப்பட்ட ஆண் குழந்தையை, சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டு குழந்தையை மீட்ட போலீசார் கடத்திய பெண்ணை கைது செய்துள்ளனர்.

திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்த கோபி என்பவரின் கர்ப்பிணி மனைவி சத்யாவுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 7 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், மருத்துவமனையில் நேற்று சத்யாவுடன் உறவினர்கள் யாரும் இல்லாத நேரத்தில், அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது பாண்டியம்மாள் என்பவர் குழந்தையை கடத்தி சென்றுள்ளார்.

சத்யா கண் விழித்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாரிடம் புகார் அளித்தார். மருத்துவமனை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து இடுவம்பாளையம் பகுதியில் இன்று காலை குழந்தையை மீட்டுள்ளனர்.

கடத்தலுக்கான காரணம் குறித்து பாண்டியம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.