ரூ.7,220 கோடி அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்ட கொல்கத்தாவை சேர்ந்த நகைக்கடை நிறுவனம்

கொல்கத்தாவை மையமாக கொண்டு இயங்கி வரும் நகைக்கடை நிறுவனம் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 20 பொதுத்துறை வங்கிகள் மற்றும் 5 தனியார் வங்கிகளிடம் இருந்து ரூ.2,672 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுப்பட்டு வந்துள்ளது. இந்தியாவில் அதிக வங்கிக்கடன் மோசடியில் ஈடுபட்டுள்ள 100 நிறுவனங்களில் இந்த நிறுவனமும் ஒன்றாகும்.

சி.பி.ஐ., வருவாய் புலனாய்வுத்துறை ஆகிய அமைப்புகள் இந்த நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்களான 3 சகோதரர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. அதன்படி, கடந்த 2018ஆம் ஆண்டு நிலேஷ் பரேக் என்பவர் கைது செய்யப்பட்டார். கடந்த 2018-ம் ஆண்டு அமலாக்கத்துறையும் நிதி மோசடி வழக்கை பதிவு செய்தது.

தற்போது இந்த நிறுவனம் வெளிநாட்டு ஏற்றுமதி என்ற பெயரில் கோடிக்கணக்கில் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூ.7,220 கோடி அளவுக்கு இந்த மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது இந்த நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது அன்னிய செலாவணி நிர்வாக சட்டத்தின் (பெமா) கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்க இந்த நிறுவனத்துக்கு அமலாக்கத்துறை சிறப்பு இயக்குனர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதுவரை நோட்டீஸ் அனுப்பிய சம்பவங்களில் இதுதான் மிகப்பெரிய தொகை என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.