இடுக்கியில் கனமழையால் நிலச்சரிவு... 5 பேர் உயிரிழப்பு

இடுக்கி: கனமழையால் நிலச்சரிவு... கேரள மாநிலம், இடுக்கியின் தொடுபுழா அருகே உள்ள கிராமத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடுபுழாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காணாமல் போனதாக தகவல்கள் வந்ததையடுத்து, தேடுதல் பணியில் ஈடுபட்டபோது அவர்கள் ஐவரும் மண்ணிற்குள் புதைந்துள்ளனர் என்பது தெரிய வந்தது.

நிலச்சரிவில் சிக்கியவர்கள் கஞ்சார் பகுதியைச் சேர்ந்த தங்கம்மா (80), அவரது மகன் சோமன் (52), அவரது மனைவி ஷாஜி (50), அவர்களது மகள் ஷிமா (30), தேவானந்த் (5) ஆகியோர் ஆவர். மேலும், காசர்கோடு தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது.

கோட்டயம், நெடுங்குன்றம், கருகாச்சல், கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அங்குள்ள மக்களை வெளியேற்ற தீயணைப்புப் படையினர் விரைந்துள்ளனர். இதற்கிடையில், பத்தனம்திட்டா மாவட்டத்தில், மல்லப்பள்ளி தாலுக்காவின் சில பகுதிகளில் லேசான வெள்ளம் ஏற்பட்டது. மல்லப்பள்ளி, அணைக்காடு, தொள்ளியூர் கிராமங்களில் உள்ள சிறு ஓடைகள் நிரம்பி வழிகின்றன.

மல்லப்பள்ளி தாலுகாவில் உள்ள கொட்டாங்கல் கிராமத்தில் சில வீடுகள் மற்றும் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவருவதால், வெள்ள நீரில் கார் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதாக பத்தனம்திட்டா மாவட்ட தகவல் அதிகாரி தெரிவித்தார்.