இந்தோனேசியாவில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு 11 பேர் உயிரிழப்பு

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனாவுக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு தீவுக்கூட்டங்களை கொண்ட இந்தோனேசியா நாட்டில் நிலநடுக்கம், கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நிகழ்வது வழக்கம்.

இந்த இயற்கை பேரிடர்களால் அந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது, அந்நாட்டின் தீவுக்கூட்டங்களில் ஒன்றான போர்னியோ தீவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக அப்பகுதிகளில் அவ்வப்போது நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.

போர்னியோ தீவின் தரகன் பகுதியின் நேற்று பெய்த கனமழை காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் இருந்த சில வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. மேலும், வீடுகளில் தங்கி இருந்த பலரும் உயிருடன் மண்ணுக்குள் புதைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த நிலச்சரிவில் சிக்கி 5 குழந்தைகள் உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சிலர் மண்ணுக்குள் புதைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.