பலத்த மழையின் எதிரொலியாக அசாமில் இன்று நிலச்சரிவு, 20 பேர் உயிரிழப்பு

அசாம் மாநிலத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் தெற்கு அசாமில் உள்ள பராக் பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறது. இப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

இதில் கச்சார் மாவட்டத்தை சேர்ந்த ஏழு பேரும், ஹைலகண்டி மாவட்டத்தை சேர்ந்த ஏழு பேரும், கரிம்கஞ்ச் மாவட்டத்தில் 6 பேரும் ஆக 20 பேர்கள் உயிரிழந்துள்ளனர். கோல்பாரா மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து நாகான் மற்றும் ஹோஜாய் உள்ளன.

இதுதொடர்பாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில், வெள்ளத்தால் 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 348 கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளன. ஏறக்குறைய 27,000 ஹெக்டேர் பயிர்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் தெற்கு அசாமில் உள்ள பராக் பள்ளத்தாக்கு பகுதியின் மூன்று வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
வடகிழக்கு மாநிலமான அசாமில் ஏற்கனவே ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் 3.5 லட்சம் பேர் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.